கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழக் கடைகளை அகற்றச் சென்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 50-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பலாப்பழக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழக் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வியாபாரம் செய்து வந்த கடைக்காரர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் கடைகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment